08 சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் இருபத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்து இலங்கைக்குக் கொண்டு வந்த இந்தோனேசியப் பெண்ணொருவர் நேற்று (22ஆம் திகதி) சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அந்நாட்டில் புடவை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 42 வயதுடைய பெண் என முதற்கட்ட சுங்க விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவர் முதலில் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து இந்த போதைப்பொருள் சரக்குகளுடன் தனது பயணத்தைத் தொடங்கி கத்தாரின் தோஹாவுக்கு வந்து, அங்கிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் KR-654 மூலம் இந்த நாட்டிற்கு வந்துள்ளார்.
04 கிலோ 598 கிராம் எடையுடைய தடிமனான ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைகளை கவனமாக வெட்டித் தயார் செய்து போதைப்பொருளை மறைத்து வைத்துள்ளார்.
இந்த வருடத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட ஐந்தாவது கொக்கெய்ன் போதைப்பொருள் சோதனை இதுவென சிரேஷ்ட சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.