இஸ்ரேலுக்கான உதவிகள் அனைத்தையும் அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் என அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – இஸ்ரேல் பிரதமர் ஆகியோர் கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி,
இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும். 75 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலின் நிறுவனர்கள், சுதந்திரம், நீதி மற்றும் அமைதி அடிப்படையில் ஒரே நாடாக இஸ்ரேலை அறிவித்தனர்.
இந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் இஸ்ரேலுடன், இன்றும், நாளையும் மற்றும் எப்போதும் அமெரிக்கா துணையாக நிற்கும்.
அதற்கு நாங்கள் உறுதி கூறுகிறோம். ஹமாஸ் அமைப்பு, பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக இல்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் காசா பகுதி மக்களுக்கு உதவி தேவையாக உள்ளது.
மேலும், காசா வைத்தியசாலை மீது நடந்த தாக்குதல் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு விசாரணையை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.