எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கை முழுவதும் மாலை வேளையில் கனத்த மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பலத்த மழை பெய்யும் இடங்கள் பகுதிக்கு ஏற்ப மாறுபடலாம் என்றும் அவர் கூறினார்.
தென் மாகாணத்தில் பலத்த மழையின் நிலைமை குறைந்துள்ள போதிலும் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றும் (09) நாளையும் (10) இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இலங்கை முழுவதும் மழை நிலைமை உருவாகலாம் எனவும் ஒரு மணித்தியாலத்திற்குள் 100 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வளிமண்டல நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் மி.மீ. 75க்கு மேல் அதிகபட்சமாக மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை மற்றும் தற்காலிக பலத்த காற்று , மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.