இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் நிலவும் கடுமையான போரை கருத்தில் கொண்டு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் உயிர் பாதுகாப்பு உள்ளிட்ட அவசரத் தேவைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, இஸ்ரேலில் வாழும் இலங்கை மக்களின் தேவைகள் தொடர்பில் அதிகபட்ச கவனத்தை வழங்குவதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இஸ்ரேலில் பணிபுரியும் அல்லது வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பின் அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் சிரமங்கள் இருந்தால் இலங்கை அதிகாரிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தொலைபேசி எண் (+94) 117966396, வாட்ஸ்அப் எண் (+94) 767463391 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் உங்கள் தேவைகளைச் சமர்ப்பிக்கவோ அல்லது தேவையான தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ முடியும்.
இஸ்ரேலில் தங்கியுள்ள எந்தவொரு இலங்கையர்களும் அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு நடைமுறை மற்றும் வேறு எந்த முறையிலும் இந்த சேவையைப் பெற முடியும் என அரசாங்கம் வலியுறுத்துகிறது.