தற்போது நிலக்கரி இருப்பு நிறைவடைந்துள்ளதால் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முற்றாக நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று ( 19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கமைய டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முழுமையாக நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சுமார் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டினை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது, 2 மணித்தியாலமும், 20 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படுகின்ற நிலையில், இந்த மின் துண்டிப்பை இரண்டு மடங்காக நீடிக்க வேண்டியிருக்கும்.
இதேவேளை, அடுத்த கப்பல் வருவதற்கு மேலும் ஓரிரு வாரகாலம் எடுத்தால், மின்னுற்பத்தி நிலையத்தில், மற்றுமொரு இயந்திரத்தை நிறுத்த வேண்டும்.
அப்போது மேலும் 300 மெகாவொட் மின்சாரம் கிடைக்காமல்போகும்.
அதன் பின்னர், மேலும் தாமதமானால், மின்னுற்பத்தி நிலையத்தை முழுமையாக நிறுத்த வேண்டியேற்படும்.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன, தனியார் மின்னுபத்தி நிலையம் ஒன்றின் தரப்பினர் தற்போது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எந்த உடன்படிக்கை செய்யப்பட்டாலும், 45 வீத பங்குகளைப் பெற்றுக்கொண்ட இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கு இலங்கையை ஆட்டங்காண செய்ய முடியும்.
இதற்கு இடமளிக்காது, அதன் அபாயத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தநிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில், மதிய உணவு நேரத்தில் கூடி, முதற்கட்ட எதிர்ப்பை வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், இதன்போது, மின்விநியோகத்துக்கு தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.