அமைச்சரவை முடிவின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டுக்கான செலவுகளுக்கான ஒதுக்கீட்டிலிருந்து குறைந்தபட்சம் 6 வீதம் குறைக்குமாறு திறைசேரியின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2023 ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரச – செலவு மதிப்பீடுகளில், மீண்டெழும் செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளில் 6 சதவீதத்தை குறைக்க கடந்த ஜனவரி 16 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், மருத்துவ செலவுகள், வாடகை வரி, உள்ளூராட்சி மன்றங்களுக்கான வரி, ஓய்வூதிய சலுகைகள், உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு கடன்களுக்கான வட்டியை செலுத்துதல், திறைசேரி பற்றுச்சீட்டு, திறைசேரி முறிகள் மீதான சலுகைகள், அத்தியாவசிய நலன்புரி கொடுப்பனவுகளை செலுத்துதல் மற்றும் அரசியலமைப்பு மற்றும் ஒப்பந்த இணக்கப்பாடுகள் தொடர்பில் வரவு செலவுத்திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தவிர்த்து, ஏனைய அனைத்து மீண்டெழும் செலவுகளுக்கான மொத்த நிதியில் 06 வீதத்தை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கான நிவாரணங்களை வழங்குதல், சமுர்த்தி, முதியோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு, ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு, கர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுத் திட்டம், முன்பள்ளிகளுக்கான காலை நேர உணவு, போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்குணவு திட்டம் ஆகியவற்றிற்கு புதிய சுற்றறிக்கையூடாக எவ்வித இடையூறுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.