இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிய நடன அக்கடமி, இந்திய வீடமைப்புத்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக காலி, கண்டி மற்றும் நுவரெலியாவில் 300 வீடுகள், பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் மாதிரிக் கிராம வீடமைப்புத் திட்டம் என்பன இன்று அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின்போது, இந்த நிகழ்வு இடம்பெற்றது.
60,000 வீடுகளைக் கொண்ட இந்த வேலைதிட்டத்தில் 50,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.
பெருந்தோட்டத்தைச் சேர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4000 வீடுகளில் மூன்றாம் கட்டச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம் பணிகள் பூர்த்தியாகியுள்ள 3300 வீடுகள் ஏற்கனவே பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும் இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘மாதிரி கிராம வீட்டுத் திட்டம்’ மூலம் அநுராதபுரம் மற்றும் பதுளை மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வும் இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகை வளாகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி கண்டிய நடத்துக்கான கல்வியகமொன்றை இந்திய வெளிவிவகார அமைச்சர் இணையவழியூடாக திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, இந்திய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களால் இலங்கைக்கு வழங்கும் பரிசாக இந்த கண்டிய நடத்துக்கான பயிற்சி நிறுவனத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் வைத்தமை குறிப்பிடத்தக்கது.