மாவனல்லை பிரதேசத்தில் இளைஞர்கள் இருவரை கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலைச் செய்து புதைத்த சம்பவத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கேகாலை குற்றப்புலனாய்வு பிரிவின் காவல்துறையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவனல்லை மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் வைத்தே இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெலிஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலைச் செய்யப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆவணங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மொஹமட் அன்வர் மொஹமட் அர்ஷாத் மற்றும் மொஹமட் இக்பால் மொஹமட் அஸ்ஹர் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நவம்பர் 18 மற்றும் 25 ஆம் திகதிகளில் இருந்து இவர்கள் இருவரும் காணாமல்போயுள்ளனர் என்று காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.
இதன்படி, கேகாலை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த இளைஞர்களைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இவ்விரு இளைஞர்களை கொன்று புதைத்த சம்பவத்தில் மாவனல்ல பிரதேசத்தில் பிரதான போதைப்பொருள் வர்த்தகர் என கருதப்படும் நபரையும் அவரது மூன்று தரகர்களையும் கைது செய்ய கேகாலை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் கடத்தல்காரரின் தரகர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.