அம்பாறையில் இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள தம்பிலுவில் இன்று பகல் 1.30 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்ட மாணவனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயதில் 8ம் ஆண்டில் கல்வி கற்றும் 13 வயதுடைய சிவபாலன் கிரிஷாந் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடல்பில் தெரிய வருகையில்,
குறித்த பாடசாலையில் ஒரே வகுப்பில் இருமாணவர்களும் கல்வி கற்றுவருகின்றனர். இந்த நிலையில் சம்பவதினமான இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை முடிவடைகின்ற நேரத்தில் இரு மாணவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்த மாணவன் மற்றொரு மாணவனை தாக்கியுள்ளார். இதனையடுத்து உயிரிழந்த மாணவனை தாக்குதலுக்குள்ளான மாணவன் திருப்பி தாக்கியதில் அவன் இரு மேசைக்களுக்கிடையே வீழ்ந்து வாயால் நுரை தள்ள கிடந்துள்ளார்.
இந்நிலையிலேயே மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் சக மாணவனை தாக்கிய மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.