எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சீருடைப் பொதிகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இன்று (19) தமது உத்தியோகபூர்வ டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்காக 5 பில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை சீருடை துணிகளை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையின் மூலம் நாட்டின் வருடாந்த சீருடை துணி தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
20 கொள்கலன்களில் 38,000 பெட்டிகளில் 3 மில்லியன் மீற்றர் முடிவுப் பொருட்களைக் கொண்ட முதல் தொகுதி சீனாவில் இருந்து இலங்கை வந்துள்ளன.
சீனாவினால் வழங்கப்பட்டுள்ள முதல் தொகுதி பாடசாலை சீருடை துணிகளில் ஆண் மாணவர்களுக்கான மேற்சட்டை மற்றும் மாணவிகளுக்கான சீருடைக்குரிய வெள்ளை துணி(2,374,427.5 மீற்றர்), வெள்ளை காற்சட்டை துணி (350,031.5 மீற்றர்), நீல நிற காற்சட்டை துணி (150,003.5 மீற்றர்) மற்றும் செம்மஞ்சள் துணி (138,134 மீற்றர்) என்பன அடங்குவதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சீருடைகளின் முதல் பகுதி ஜனவரி 6 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.