இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்பன வழங்கிய உத்தரவை மீறி மின்சார சபை இன்றைய தினமும் மின்துண்டிப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தது.
கடந்த தினங்களில் அமுலான நேர அட்டவணைக்கு அமைய இன்றைய தினமும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் மின்சக்தி அமைச்சு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை, கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் என்பனவற்றின் அங்கத்தவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, இன்று முதல் உயர்தரப் பரீட்சை இடம்பெறும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என்ற இணக்கப்பாடு எட்டடப்பட்டது.
எவ்வாறாயினும், குறித்த உத்தரவுக்கு அமைய செயற்பட தவறும் பட்சத்தில், மனித உரிமை ஆணைக்குழு சபையின் சட்டத்தின்படி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை அவமதித்த அல்லது ஆணைக்குழுவின் அதிகாரத்தை அபகீர்த்திக்குள்ளாக்கிய குற்றத்திற்காக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.