கல்வி பொதுதராதர உயர் தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
2 ஆயிரத்து 200 பரீட்சை நிலையங்களில் கல்வி பொதுதராதர உயர் தரப் பரீட்சை இடம்பெறவுள்ளன.
3 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிக பரீட்சார்த்திகள் இந்த முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இந்த நிலையில், பரீட்சை நேரத்திலும், இரவு வேளையில் மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன், பரீட்சைக்கு செல்லும் பரீட்சார்த்திகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி உரிமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட அடையாளக் கடிதம் ஆகியவற்றை பரீட்சை மையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இதேவேளை, உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்காக புகையிரத திணைக்களமும் இலங்கை போக்குவரத்து சபையும் இணைந்து விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
அதன்படி, 1,617 சிசுசெரிய பேருந்துகளும் பரீட்சை நாட்களில் இயக்கப்படுகின்றன.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக இன்று முதல் 16 புதிய தொடரூந்து சேவை நேரங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக தொடரூந்து சேவை துணை போக்குவரத்து கண்காணிப்பாளர் என்.ஜே. இந்திபோலகே தெரிவித்துள்ளார்.
பரீட்சை மையங்கள், ஒருங்கிணைப்பு மையங்கள், பிரதேச மற்றும் மத்திய சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பெண் நிலையங்கள் ஆகியவற்றில் 1,625 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமான போதிலும், 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சார விநியோக தடை தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மாலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுழற்சி முறையில் மின்சார தடை அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.