சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில், 17 வயதான சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய காவல்துறை உத்தியோகத்தர் மன்னார் முருங்கன் காவல்துறையில் பணியாற்றும், பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறுமியின் செயற்பாடுகளில் சந்தேகம் கொண்ட பெற்றோர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, ஒரு வருடத்திற்கு முன்னர் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த 30ஆம் திகதி சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கைதானதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.