மாத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மாத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை- உக்குவளை லேலிஅம்ப பிரதேசத்தில் இன்று காலை தாயும் பிள்ளைகள் மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
உயிரிழந்த சிறுவனின் சகோதரர்கள் இருவரும் பாடசாலை செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது, அவர்களது வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் இவ்வாறு சிறுவர்களின் தாயையும் பிள்ளைகளையும் தாக்கி காயப்படுத்தியதாகவும் இதன்போது அவர்களின் தந்தை தொழிலுக்குச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் லேலிஅம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது தாயும் 19 வயது மகளும் மற்றுமொரு சிறுவனும் பாரிய காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்பவர் என்றும் தெரியவந்துள்ளதுடன் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.