சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 43 பேர் கடற்படையினரின் உதவியுடன் இன்று (23) கைது செய்யப்பட்டதாக ஹபராதுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் உதவியுடன் ஹபராதுவ காவல் நிலைத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த குழுவினர் உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 43 பேரும் யாழ். மாவட்டத்தில் வசிப்பவர்கள் எனவும், அவர்களில் 33 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சுமார் ஒரு மாத காலமாக வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்த இக்குழுவினர் ஐந்து நாட்கள் சுற்றுலா செல்வதாக கூறி நேற்று வவுனியாவில் இருந்து காலி உனவட்டுன வரை பேரூந்தில் சென்று ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த காவல்துறையினர் , சந்தேகநபர்களை
காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டனர்.