அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் உள்ளடங்கும் அதேவேளை அவர்களில் மூன்று சிவில் பிரதிநிதிகளும் நியமிக்கப்படுவார்கள்.
தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இதுவரை 120 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத பொருத்தமான நபர்கள் மற்றும் தற்போதைய விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
தெரிவு செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும், அதன் பின்னர் ஜனாதிபதி அவர்களை அரசியலமைப்பு சபைக்கு நியமிப்பார்.