சென்னை விமான நிலையத்தில் வைத்து இரண்டு இலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையிலிருந்து சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திச்சென்ற இரண்டு இலங்கை பெண்களை சென்னை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்தினர் கைது செய்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய 2 இலங்கை பெண்கள் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டனர். அத்துடன், அவர்களது உடைமைகளை சோதனை செய்யப்பட்டதுடன், பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனையிடப்பட்டனர்.
அதன்போது 2 பெண்களும் தமது உள்ளாடைகளில் மறைத்து வைத்து கடத்திவந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து 25 லட்சத்து 73 ஆயிரம் இந்திய ரூபா (சுமார் 1.1 கோடி இலங்கை ரூபா) மதிப்புள்ள 516 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பில் மேற்படி 2 பெண்களையும் கைது செய்த தமிழக சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.