உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரரான எலோன் மஸ்க், தமது மின்சார மகிழுந்து தயாரிப்பாளரான டெஸ்லாவில் 3.58 பில்லியன் டொலர் மதிப்புள்ள மேலும் 22 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
இந்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இந்த பங்குகள் விற்கப்பட்டன என்று அமெரிக்க நிதிக் கட்டுப்பாட்டாளர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து கடந்த ஆண்டு முதல் மஸ்க் விற்ற டெஸ்லா பங்குகளின் மொத்த தொகை 40 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வார ஆரம்பத்தில் மஸ்க் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற நிலையை இழந்தார்.
இந்தநிலையில் அண்மைக்காலத்தில் அவர் மேற்கொண்ட பங்கு விற்பனைக்கான காரணம் வெளியிடப்படவில்லை.
நிதிச் சந்தை தரவு வழங்குநர் தகவல்களின்படி, அவர் 13.4 வீத பங்குகளுடன் டெஸ்லாவின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கிறார்.
சமூக ஊடக தளமான ட்விட்டரை 44 பில்லியன் டொலர்களுக்கு கையகப்படுத்திய சில நாட்களிலேயே மஸ்க் 3.95 மதிப்புள்ள டெஸ்லாவின் 19.5 மில்லியன் பங்குகளை விற்பனை செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.