யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் கிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (11) அதிகாலை தாயையும் குழந்தையையும் காணவில்லை என தேடிய போது, இருவரும் கிணற்றில் இருந்து சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
40 வயதான தாயொருவரும் 7 மாத குழந்தையுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதவான் A.ஜூட்சன் சடலங்களை பார்வையிட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, இன்று சட்ட வைத்திய அதிகாரியால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த தாய் மனநோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.