மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி கேரள கஞ்சா போதைப்பொருள் நேற்று (4) மாலை நீதிமன்றத்தின் நுழைவு பகுதியில் இருந்து போதை பொருள் பணியக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறை போதைப்பொருள் பணியகத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே கடந்த நவம்பர் மாதம் கடத்தல் ஒன்றுடன் தொடர்பு பட்டதாக மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் இரகசியமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சா பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் இலுப்பக்கடவை காவல்துறையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த டிப்பர் வாகனத்தில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த டிப்பர் வாகனம் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று அதே டிப்பர் வாகனத்துக்குள் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 116 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா நேற்று இரவு மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/01/IMG_9313.jpg)
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/01/67278264-dbb9-4980-baa2-a6624f5cfd8e-750x430-1.webp)