நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்றும் தலைமைப் பொறுப்புக்கான ஆற்றல் இதற்குமேல் தன்னிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பிப்ரவரி 7ஆம் தேதிக்கு முன்பாக அவர் விலகவுள்ளார். அவருக்கான மாற்றுத் தலைவரை தேர்ந்தெடுக்க வரும்நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும்.
நியூசிலாந்தில் அக்டோபர் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
42 வயதான ஜெசிந்தா ஆர்டெர்ன், கோடை விடுமுறையின் போது தனது எதிர்காலம் குறித்து யோசிக்க நேரம் எடுத்து கொண்டதாக தெரிவித்தார். “அந்த காலகட்டத்தில் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வேன் என்று நம்பினேன், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நான் அதை செய்யவில்லை. எனவே, நான் பதவியில் மேலும் தொடர்ந்தால் அது நியூசிலாந்துக்கு செய்யும் அவமதிப்பு” என்று செய்தியாளர்களிடம் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார்.