அரச மற்றும் அரச அனுசரணையுடனான தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளின், மூன்றாம் தவணையின், முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, மூன்றாம் தவணையின், இரண்டாம் கட்டம், ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை, அடுத்த ஆண்டு முதல் ஆரம்பப் பிரிவு வகுப்புக்களுக்கு தவணைப் பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வழங்கப்படுகின்ற புள்ளிகளை, வருட இறுதியில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளுடன் இணைத்து, அதனை இரண்டாக பிரித்து, மாணவர்களுக்கு இறுதி மதிப்பீட்டை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
மாணவர்களுக்கு பாடசாலை மிகவும் விருப்பமான இடமாக மாற்றும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும், சகல பாடத்திட்டங்களையும் முழுமைப்படுத்தி, கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.