பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோதுமை மாவின் விலை 270 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதே பாணின் விலையை நாங்கள் அதிகரித்தோம்.
கோதுமை மாவின் விலை 400 ரூபாவாக உயர்த்தப்பட்ட போதிலும் பாண் இறாத்தல் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவில்லை.
400 ரூபா என்ற ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 100 ரூபாவால் குறைப்பதால் பாணின் விலையை குறைக்க முடியாது.
பாண் மற்றும் பணிஸ் ஆகியவற்றின் விலைகளை குறைக்க வேண்டுமாயின் கோதுமை மாவை விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்கள் கோதுமையின் விலையை குறைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோதுமை மாவின் விலையை நிலையாக பேணுவதற்காக அதனை துருக்கி மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததாக நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.