பெப்ரவரி மாதம் முதல் புதிய புகையிரத அட்டவணை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழு கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அமைச்சர் தலைமையில் கூடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய புகையிரத கால அட்டவணையானது கிடைக்கக்கூடிய திறனுக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், “எல்லா-ஒடிஸி” போன்ற சுற்றுலா அம்சங்களுடன் கூடிய தொலைதூர புகையிரத சேவைகளுக்கான டிக்கெட்டுகளை 100% ஆன்லைனில் ஆர்டர் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பணியாளர்கள் ஓய்வுப் பெற்று செல்கின்றமை காரணமாக ரத்தாகக்கூடிய புகையிரத சேவைகளை மீளமைப்பதற்கான பணிகளை இந்த மாத இறுதிக்குள் தயார்படுத்தவுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வருட இறுதியில் 10 புகையிரத ஓட்டுநர்கள் மட்டுமே ஓய்வு பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிகளவான உல்லாசப் பயணிகள் வருகை தருவதனால் எரிபொருள் விநியோகத்திற்காக அண்மைய நாட்களில் அதிகமான புகையிரதங்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளதாகவும், இதனால் பயணிகள் புகையிரத சேவைகளை ஓரளவு குறைக்க வேண்டியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.