அரசாங்கத்தினால் வாகன உதிரிப்பாகங்களின் விலை, 5 சதவீதத்தால் குறைக்கப்படுமாயின் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் என பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறின்றி, டீசல் விலையை குறைப்பதனால் மாத்திரம் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து சங்கங்கள் குறிப்பிடுகின்றன.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கனியவள கூட்டுத்தாபனம் ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றின் விலைகளை குறைத்துள்ளன.
இதன்படி, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, 405 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் கட்டண குறைப்பின் ஊடாக மாத்திரம் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாத நிலை உள்ளதாக, அகில இலங்கை பேருந்து சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் குறிப்பிட்டார்.
நூறு ரூபாவினால் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் 10 முதல் 15 ரூபாவினால் விலை குறைக்கப்படுகிறது.
இந்த விலை குறைப்பு பேருந்து கட்டணத்தில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது. புதிய விலைத் திருத்தத்துக்கு அமைய குறுந்தூர பேருந்துகளுக்கு நாளாந்தம் 750 ரூபாவை மீதப்படுத்த முடியும்.
நெடுந்தூர பேருந்துகள் 100 லீற்றர் டீசலை பெற்றால் ஆயிரத்து 500 ரூபாவை மீதப்படுத்த முடியும் என அகில இலங்கை பேருந்து சங்க சம்மேளனத்தின பிரதான செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.