அநுராதபுரம் – பரசங்கஸ்வெவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த குறித்த சிறுமி, முன்பக்க கதவின் ஊடாக கீழே இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து பேருந்தில் சிக்குண்டுள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அளுத்கம, தாருசலாம் முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் கல்விகற்றுவந்த, கம்பிரிகஸ்வெவ பிரதேசத்தில் வசித்து வந்த 6 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பரசங்கஸ்வெவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.