நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் இரண்டாவது மின்உற்பத்தி இயந்திரத்தின் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று (23) முதல் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய அந்த நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கி அலகுகளும் செயற்பட்டு வரும்நிலையில் 900 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த ஜூன் 18ஆம் திகதியன்று 2 ஆவது மின்பிறப்பாக்கி அலகில் பழுது ஏற்பட்ட நிலையில் கடந்த 4 மாதங்களாக பராமரிப்பு பணிகள் இடம்பெற்றுவந்தன.
இந்நிலையில் நேற்று காலை 6.30 மணி முதல் குறித்த பிறப்பாக்கி செயற்படத் தொடங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நீராவிக் கசிவு காரணமாக செப்டெம்பர் 27 ஆம் திகதி 3ஆம் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு கடந்த 2ஆம் திகதி முதல் சரி செய்யப்பட்டு, மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டதுடன், அலகு 1 மற்றும் அலகு 3 ஆகிய இரண்டும் முழு திறனில் இயங்கிவந்த நிலையில், 2ஆவது பிறப்பாக்கியும் செயற்பட தொடங்கியுள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல், நாட்டின் மின் தேவையில் 10 முதல் 15 சதவீதத்தை குறித்த 2ஆம் அலகு பூர்த்தி செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.