வருட இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தின் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காங்கேசன்துறை துறைமுகம் போன்ற பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இடங்களை மீள புதுப்பிக்கும் வேலை திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.
அதன் காரணமாகவே இன்றைய தினம் காங்கேசன் துறைமுகத்திற்கு நேரடியாக இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் நான் விஜயத்தினை மேற்கொண்டு இங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய வேலை திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் நான் ஆராய்ந்து இருக்கின்றேன்.
குறிப்பாக இந்திய நாட்டின் உதவியையும் நாங்கள் கோரவுள்ளோம். ஏற்கனவே நாங்கள் இந்திய நாட்டின் உதவியுடன் சில வேலை திட்டங்களை இங்கே முன்னெடுத்து இருக்கின்றோம். ஆனால் இங்கே பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவ்வாறான வேலை திட்டங்களை ஆரம்பித்து மிக விரைவில் இந்த துறைமுகத்தினை செயற்படுத்துவதற்கு நாங்கள் முனைகின்றோம்.
அதேபோல் பலாலி சர்வதேச விமான நிலையமும் நமக்கு ஒரு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையம் ஆகும். அந்த விமான நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும். ஓரிரு மாதங்களில் பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.