முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
நேற்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் குழுவை விரட்டியடிப்பதற்காக கிழக்கு கடற்படை கட்டளை 04 ஆவது விரைவுத் தாக்குதல் புளோட்டிலாவின் விரைவுத் தாக்குதல் கப்பலை அனுப்பியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இலங்கை கடற்பரப்பில் 10 இந்திய மீனவர்களுடன் தொடர்ந்தும் தங்கியிருந்த இந்திய இழுவை படகு ஒன்றை கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினர் 10 இந்திய மீனவர்களுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவர்கள் இலங்கை கடலோர காவல்படையினூடாக திருகோணமலை உதவி கடற்றொழில் இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு இதுவரை 14 இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியதாகவும், 93 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.