எதிர்வரும் திங்கட்கிழமை 2,200 பரீட்சை நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதுடன் 3 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிக பரீட்சார்த்திகள் இந்த முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான வினாப் பத்திரங்கள் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
நேற்றிரவு முதல் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு வினாப்பத்திரங்களை அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.
அதேநேரம், பரீட்சை காரணமாக தொடர்ந்து மின்சாரத்தை விநியோகிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை மற்றும் தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக பரீட்சை நேரத்தில் மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
அதேநேரம், பரீட்சைக்கு செல்லும் பரீட்சார்த்திகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.