வட மாகாணத்தில் தற்போது நிலவும் குளிரான வானிலை காரணமாக 500இற்கும் மேற்பட்ட கால்நடைகள் மரணித்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் பொருளாளர், வைத்தியர் எஸ். சுகீர்தன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனை கட்டுப்படுத்துவதற்கு தீவறைகளை ஏற்படுத்தி கால்நடைகளுக்கு வெப்பத்தை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் குளிர் காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர் யாழ் மாவட்டத்தில் 80ற்கும் மேற்பட்ட ஆடுகளும் 20 தொடக்கம் 30ற்கு மேற்பட்ட மாடுகளும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மழையுடன் கூடிய குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என்பதால் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும் இவ் இறப்பு இன்னும் கூடலாம் என வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
குறிப்பாக நாய்கள் பூனைகள், கோழிகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றையும் பாதுகாப்பான கொட்டில்களில் தங்க வைத்து குளிர் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.