கொழும்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டிகளின் வெளிப்புற பாகங்களை கொள்ளையடிக்கும் மோசடி கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் திருடப்பட்ட முச்சக்கர வண்டியொன்றை வைத்திருந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூவர் கொண்ட கும்பலால் நடத்தப்பட்ட இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து 15 குளிரூட்டிகள், குளிரூட்டிகளை திருட பயன்படுத்திய உபகரணங்கள், முச்சக்கர வண்டி மற்றும் 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பல்பொருள் அங்காடிகளில் குளிரூட்டிகள் திருடப்பட்டதாக எழுந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது.
10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதன் மூலம் குளிரூட்டல் மோசடி தொடர்பில் தெரிய வந்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.