நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் மே 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்ததுடன், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரியுள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் அமர்வு, மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்காக இந்த ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து, நிதியமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் கடந்த 3ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com