தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சியில் மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்தவேளை மோட்டர் சைக்கிளில் பிரவேசித்த இருவர் கைத்துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன்,அது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி சுகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/06/Screenshot-2023-06-02-205629.png)
இந்தநிலையில், அவர்கள் இருவரையும் மக்கள் பிடிக்க முயற்சித்தபோது, கைத்துப்பாக்கியுடன் பிரவேசித்த சந்தேக நபர் தப்பியோடிய நிலையில், மற்றைய சந்தேக நபர் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
வடமராட்சி கிழக்கில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடக்கும் பாடசாலை பரீட்சை மண்டபத்திற்கு அருகில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அரசியல் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு தொடர்பில், பரீட்சை மண்டபத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் சிலர் ஒன்று கூடியுள்ளதாக காவல்துறை புலனாய்வு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் சென்று இருந்தனர்.
அவர்களது கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் சென்றவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புலானய்வு உத்தியோகத்தர்களிடம் அடையாள அட்டையைக் கோரி இருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அமைய, அவரிடம் தனது அடையாள அட்டையை காண்பிக்க முயன்ற வேளை, அங்கிருந்த நபர்கள் புலனாய்வு உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த வேளை அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.