2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2,888 நிலையங்களில் இம்மாதம் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பரீட்சை முடியும் வரை கல்வி வகுப்புகளை நடத்த முடியாது.
வகுப்புகளை நடத்துதல், பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், மாதிரி தாள்களை அச்சிடுதல், சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டுதல், அச்சிடுதல் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்தல் போன்றவை இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
விதிமீறல்கள் குறித்து பொது மக்கள் பொலிஸார் அல்லது திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை அல்லது 0112 421 111 ஊடாக தலைமையகத்தை தொடர்பு கொள்ளலாம்.
1911 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் அல்லது 0112 784 208 / 0112 784 537 ஊடாகவும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.