2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்படும் என்றும் ராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 14 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், சபாநாயகரின் ஒப்புதலுடன் டிசம்பர் 27ஆம் திகதிக்குள் சட்டமாக நிறைவேற்றப்பட உள்ளதாகவும், டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் புதிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கச் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் பொதுநலச் செலவுகளுக்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்றார்.