பதுளை மாவட்ட செயலகத்தின் விளையாட்டு துறை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பதுளை வின்சன்டைஸ் மைதானத்தில் வைத்து விளையாட்டு துறை உத்தியோகத்தர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான விளையாட்டு துறை உத்தியோகத்தர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தநிலையில், பதுளை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் சந்தேக நபரை கைது செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் பணியாளர்கள் மற்றும் அந்த பகுதி கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு கடந்த 3ஆம் திகதி சென்றிருந்த மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கடமையை உரிய முறையில் முன்னெடுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் சட்டம் உரிய வகையில் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com