தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த 14 ஆம் திகதி மாலை தலைமன்னார் கடற்பரப்பில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த குறித்த மீனவர்களின் இரண்டு படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் நிரஞ்சினி முரளிதரன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் விஷ்வலிங்கம் கெலிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.