மீரிகம பகுதியில் ரயிலுடன், கொள்கலன் லொறியொன்று மோதுண்டு இடம்பெற்ற விபத்து காரணமாக வடக்கு மற்றும் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மீரிகம – வில்வத்த பகுதியில் இன்று அதிகாலை ரயில் கடவையை கடக்க முயற்சித்த கொள்கலன் லொறியொன்றுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொல்ஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடனேயே இந்த கொள்கலன் லொறி மோதியுள்ளது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/08/nallur-kandaswamy-temple-jaffna-nallur-kandaswamy-kovil-one-most-significant-hindu-temples-jaffna-district-234604929-2.png)
இந்த விபத்தை அடுத்து, கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனால், ரயில் சிக்னல்கள், ரயில் கதவுகள், சில்லுகள் மற்றும் என்ஜின் ஆகியவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விபத்து காரணமாக இந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயணிகள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/08/FB_IMG_1691550130371-1024x461.jpg)
கொழும்பிலிருந்து பஸ்யால சந்தி ஊடாக மீரிகம அதிவேக நெடுஞ்சாலை வரை பயணிக்கும் வாகனங்கள் பஸ்யால சந்தியில் நுழைய முடியாது என்பதுடன், கொழும்பு – கண்டி பாதையை பயன்படுத்த முடியும்.
இதேவேளை, திவுலப்பிட்டியிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் மீரிகம நகரிலிருந்து இடதுபுறமாகத் திரும்பி தங்கொவிட்ட மற்றும் வரக்காபொல வீதியில் நுழைந்து கொழும்பு – கண்டி பாதைக்கு பிரவேசிக்கலாம்.
மீரிகம அதிவேக வீதியில் இருந்து புறப்பட்டு கொழும்பு மற்றும் திவுலப்பிட்டிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஹத்தமுல்ல சந்தியில் இடதுபுறம் திரும்பி கொழும்பு – குருநாகல் வீதி இலக்கம் 5 க்குள் பிரவேசிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.