அரசாங்கத்தின் தற்போதைய வரிக் கொள்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.
தமது கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியினால் இந்த பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின் போது, தங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என நம்பிக்கை கொள்வதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான சந்திப்பபொன்றும் இன்று (25) இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் கூறியுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது.
இதேநேரம், அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கை, மேலதிக கொடுப்பனவை குறைத்தல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள், எதிர்வரும் திங்கட்கிழமை சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
12 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியிலாளர் மற்றும் சட்டத்துறை சங்கத்தின் இணைப்பாளர் நந்தன உதய குமார தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் உள்ள தமது தொழிற்சங்க பிரதிநிதிகள், எதிர்வரும் 27 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு, கொழும்புக்கு வந்து, இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலயம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com