மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தின் பெரகல, பத்கொட பிரதேசத்தில் 42 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
குறித்த பகுதியில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த குடும்பங்களில் சிலர் அருகில் உள்ள பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர், ஏனையோர் உறவினர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
மண்சரிவு காரணமாக ஹப்புத்தளை – யஹலபெத்த வீதியூடான வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்ல பிரதேச செயலகங்களுக்கும் கண்டி மாவட்டத்தின் தும்பனை பிரதேச செயலகத்திற்கும் 2 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.