Friday, July 26, 2024
HomeTamilமண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்! குளிர்பானம் வழங்கிய கடற்படையினர்!

மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்! குளிர்பானம் வழங்கிய கடற்படையினர்!

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இன்று (12) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப் போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்று ஒன்று கூடியவர்கள் ஊர்வலமாக சென்று வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது கடற்படை முகாம் முன்பாக பொலிஸார் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டனர். கலகமடக்கும் படையினர் தயார் நிலையில் இருந்ததுடன் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டத்தின் நிறைவில் போராட்டகாரர்களுக்கு பிஸ்கட், குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது “எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்” என அதிகாரி ஒருவரை நோக்கி காணி உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட தருணத்தில் நில அளவை திணைக்களத்தினர் பிரசன்னமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular