தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக தலா 30 ஆயிரம் மெற்றிக் டன் எரிபொருளை கொண்ட இரண்டு கப்பல்கள் தேவைப்படலாம்.
இந்த நோக்கத்திற்காக திறைசேரி சுமார் 100 முதல் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க வேண்டும்.
எனவே, இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களால் QR ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ அல்லது வேறு எந்த எரிபொருள் உதவியையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கவோ முடியாது என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்தல் வாகனங்களுக்கான QR ஒதுக்கீட்டை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரிக்க வேண்டுமானால், அத்தியாவசிய சேவைகள், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் தொகையை குறைக்க வேண்டும் என்றார்.
இதேவேளை, தேர்தல் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை அணுகிய போதிலும், அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், போதிய எரிபொருள் விநியோகம் இன்மை உள்ளிட்ட பல காரணங்களைக் காட்டி எதிர்வரும் மார்ச் 9ம் திகதி உள்ளுராட்சித் தேர்தலை நடத்த இயலாது என்று தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.
முன்னதாக, இன்று முதல் நடைபெறவிருந்த அஞ்சல்மூல வாக்களிப்பும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யு. எம். ஆர். விஜேசுதந்தர தாக்கல் செய்துள்ள மனு நாளைய தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதனை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரர் தரப்பு நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.
எனினும், அஞ்சல் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டமையினால், குறித்த நகர்த்தல் பத்திரத்தை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என மனுதாரர் தரப்பினர் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து முன்கூட்டியே திட்டமிட்ட வகையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுமாறு கோரிய மனு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com