இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்திற்கான தனி வீட்டுத் திட்டத்தினை மீண்டும் அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை இந்திய தூதரகத்தில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்புத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த செயற்பாடுகளுக்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் ஒரு வீட்டுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபா ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்ததாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 28 லட்சம் ரூபா அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 4 ஆயிரம் தனி வீட்டுத் திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக, அந்த திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை புதிய மதிப்பீட்டு விலையின் கீழ் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com