காஸா எல்லையில் நிர்கதிக்குள்ளாகியிருந்த 17 இலங்கையர்களுக்கு, ரபா நுழைவாயிலின் ஊடாக எகிப்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூதுவராலயத்தின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (02) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.
இந்த 17 பேரை கொண்ட குழுவிலுள்ள 15 பேர் இன்று மதியம் 12 மணியளவில் எகிப்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, காணாமல் போயுள்ள இலங்கை பிரஜை, ஹமாஸ் குழுவின் பணயக் கைதியாக இருக்கலாம் என அந்த நாட்டிற்கான தூதுவர் கூறியுள்ளதாக தெரிவித்த காமினி செனரத், அவரை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.