யாழ். நகரில் அண்மையில் இரவுவேளை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறை அத்தியட்சகர் மேனன் தலைமையிலான அணியினரால் கடந்த வாரம் யாழ் நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு உந்துருளிகளும், வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 20 வயதுடைய கொக்குவில் மற்றும் சுதுமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கடை மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர்கள் கடையில் பழச்சாறு தருமாறு கோரியதாகவும் கடைப்பூட்டியதன் பின்னர் உரிமையாளர் தர மறுத்ததன் காரணமாக ஏற்பட்ட முறுகல் நிலையே கைகலப்பாக மாறியதாக கைது செய்யப்பட்ட நபர்கள் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலை 6 பேர் கொண்ட குழு மேற்கொண்டதாகவும் அதில் மூவர் தலைமறைவாகி உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.