பெண் காவல்துறை கான்ஸ்டபிளை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் களனி காவல்துறை அலுவலகத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரி ஒன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், தாக்குதலை மேற்கொண்ட காவல்துறை கான்ஸ்டபிள் அவரின் கைத்தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேகத்திற்குரிய காவல்துறை கான்ஸ்டபிளும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மஹபாகே காவல் நிலையத்தில் கடமையாற்றிவந்த சந்தேகநபரான காவல்துறை கான்ஸ்டபிள், கடந்த 25 ஆம் திகதி இரவு கடமைக்கான வரவுபதிவில் கையொப்பமிட்டு, பின்னர் சாதாரண உடையில் எவருக்கும் தெரிவிக்காமல் கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற இசை கச்சேரியை காண சென்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு கச்சேரி பாதுகாப்புக்காக காவல்துறை சீருடையில் வந்த பியகம காவல்நிலையத்தின் பயிலுநர் பெண் கான்ஸ்டபிள் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை காயப்படுத்திவிட்டு கைபேசியை திருடிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் களனி காவல்துறை அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com