ஹொரனை – இரத்தினபுரி வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்று இன்று (21) காலை தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீப்பிடித்தவுடன், பேருந்தின் சாரதி வெளியே குதித்து தனது உயிரைக் காப்பாற்றினார்.
இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டுச் சென்ற பேருந்து ஹொரனை பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளுடன் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தது.
இதன்போது, பேருந்தின் முன்பகுதியில் இருந்து புகை வந்ததால் தீ பரவியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அப்போது பேருந்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். அனைவரும் பேருந்திலிருந்து உடனடியாக இறங்கியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்தின் நான்கு சக்கரங்களைத் தவிர மற்ற பாகங்கள் அனைத்தும் நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com