அடுத்த வருடம் முட்டைகளை இறக்குமதி செய்யப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள விவசாய அமைச்சு, கோழி இறைச்சியையும் இறக்குமதி செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் கோழி இறைச்சி விலையைக் குறைக்க ஒப்புக்கொண்டதையடுத்து, உற்பத்தியும் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் ஏற்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கோழி இறைச்சியின் விலை உயர்வை கருத்தில் கொண்டு இறக்குமதி செய்யும் திட்டத்தை முன்னெடுத்திருந்தார். இருப்பினும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் தற்போது இரண்டு முறை விலையைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை உயர்வால் முன்பை விட தற்போது அதிகளவானோர் இத்தொழிலுக்கு ஈர்க்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அடுத்த சில மாதங்களில் குறையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் இருந்து இன்னும் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன, ஆனால் அமைச்சு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.