உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, நாணய ஆதரவு மற்றும் நீண்ட கால முதலீடு ஆகிய நான்கு முக்கிய துறைகளில் இந்தியா-இலங்கை உறவுகள் மேலும் மேம்படுத்தப்படும் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது, இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக பரிமாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்தியா வழங்கும் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் காணொளிச் செய்தி மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர உட்பட அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.